×

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தொடர்ச்சியான முறைப்பாடுகளை தொடர்ந்து, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாகக் கூறப்படும் 100 பயணிகள் பேருந்துகளை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். குறித்த விடயத்தை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாகப் பல முறைப்பாடுகள் வந்ததையடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த விசேட சோதனையின் விளைவாகவே, அவ்வாறான 100 பேருந்துகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக சேனாதீர சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேறு சில பேருந்துகளில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் பகுப்பாய்விற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் அந்த வாகனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளைக் கண்டறியும் இத்தகைய சோதனைகள் தொடரும் என்று குறிப்பிட்ட அவர், அனைத்து காவல்நிலையங்களும் விழிப்புடன் இருந்து குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், கொள்கலன்களைப் பயன்படுத்தி எவராவது வழக்கத்திற்கு மாறான அதிக அளவில் மண்ணெண்ணெய் வாங்க முயன்றால், அது குறித்து எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பேருந்துகளில் பயன்படுத்துவதற்காக மண்ணெண்ணெய் வழங்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115