சட்டவிரோதப் போராட்டம் தொடர்பான வழக்கில் பிணையில் இருந்தபோது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட மேலும் நால்வரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிபதி கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி நேற்று (17) இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி, 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டங்கள் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள், வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண, ரொஷன் அலி டானிஸ் அலி, அமல் சலிந்த என்ற ஆர்மி அமில, உதயங்க குமார, மற்றும் கொஸ்வத்தகே மகாநாம தேரர் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மேலதிக நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.