
இலங்கையில் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பவது தொடர்பான 32 சம்பவங்கள் தினமும் நடப்பதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தொடர்பான செய்தி அளிக்கையின் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் சம்பந்தமான அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இதனடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த வருடத்தில் மாத்திரம் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் 10 ஆயிரத்து 713 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ள இந்த முறைப்பாடுகளில் ஆயிரத்து 632 முறைப்பாடுகள் 5 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான சம்பவங்கள் பற்றியது.
2 ஆயிரத்து 626 முறைப்பாடுகள் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பானவை.
முறைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது, முறைப்பாடுகள் கிடைக்காமல் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் பல மடங்காக இருக்கலாம்.
ஊடகங்களுக்கும் சிறுவர்களும் இடையிலான உறவுகள், ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு போன்று இருக்க வேண்டும். எனினும் தற்போது அது பூச்சாண்டிக்கும் பிள்ளைகளுக்குமான உறவு போன்ற நிலைமைக்கு சென்றுள்ளது எனவும் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.