
அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உட்பட மியன்மார் இராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு 12 நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் அவுஸ்ரேலியா, கனடா, ஜேர்மனி, கிரீஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வன்முறையை நிறுத்துமாறும் மக்கள் இழந்துவிட்ட மரியாதை மற்றும் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க பணியாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மியன்மாரின் ஆயுதப்படை தினமான சனிக்கிழமை பாதுகாப்புத் தரப்பினரால் குறைந்தது 114 பேர் கொல்லப்பட்ட நிலையில் கடும் கண்டனம் வெளியிடப்பட்டு வருகின்றது.
போராட்டக்காரர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பாகோ மற்றும் மோனிவா நகரங்களிலும், கச்சின் மாநிலத்தின் சிறிய நகரத்திலும் மீண்டும் வீதிகளில் இறங்கி போராடிவருகின்றனர்.