யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதி மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் சகோரன் அறிவித்துள்ளார்.

யாழ்.வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் மரணம் தற்கொலை என பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதிலும் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கருதும் குடும்பத்தினர் தொடர்ந்து நீதி கோரி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது சகோரன் கொலை செய்யப்பட்டதாகவும், அதனை மூடி மறைத்து பொலிஸார் தற்கொலை மரணம் என நிரூபிக்க முயல்வதாகவும் தெரிவித்து, சகோதரனின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதி மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இளங்குன்றனின் சகோதரன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருட மாணவனாக கல்வி கற்று வந்த எனது சகோதரன் சிதம்பரநாதன் இளங்குன்றன் வைத்தியராக வந்துவிடுவார் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டார்.

இதனை பொலிஸார் மூடி மறைத்து தற்கொலை என காண்பிக்க முயல்கின்றனர். எனது சகோதரனுக்கு நீதி வேண்டி ஜனாதிபதி மாளிகை முன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இம் மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ளேன்.

இதற்கு ஆதரவாக யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டு எனது சகோதரனின் கொலைக்கு நீதியை பெற்றுத்தருமாறு அனைத்து முகநூல் நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.” என உள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal