
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கான ஆளுநர் பதவி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது, இறுதி யுத்தம் நடந்த 2008, 2009 காலத்தில், கொழும்பில் வசதி படைத்த தமிழ் குடும்ப இளைஞர்கள் 11 பேரை, கப்பம் பெறுவதற்காக, வெள்ளை வேன் மூலம் கடத்தி, கொலை செய்ததாக, குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு நடந்தது.
2008 மற்றும் 2009 வேளையில் எனது தலைமையிலான “மக்கள் கண்காணிப்பு குழு” இந்த கொடுமையை பதிவு செய்து உலகிற்கு அறிவித்தது. இதற்காக எனக்கும் அச்சறுத்தல் பரிசாக கிடைத்தது. “வந்து சுட்டு விட்டு போங்கடா” என நான் சொன்னேன்.
கடத்தப்பட்ட இளைஞர்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை. காணாமல் போன பிள்ளைகளின் தாய்மார்கள் அழுத அழுகை இன்னமும் என் நெஞ்சில் ஒலிக்கிறது. அன்றைய போராட்டங்கள் மனதில் நிழலாடுகின்றன.
கொழும்பு எம்பியாக, மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளராக – நான் மற்றும் ரவிராஜ், சிறிதுங்க, விக்கிரமபாகு மற்றும் பிரியாணி ஆகியோர் அச்சறுத்தல்களுக்கு மத்தியில் பலரை காப்பாற்றினோம். பல கடத்தல்களை தடுத்து நிறுத்தினோம். எம்மையும் மீறி பல நடந்தன.
வெள்ளை வான் கடத்தல்கள் அரசியல் காரணங்களுக்காக ஆரம்பித்து இது போன்ற கப்பம் பெறவேண்டி நிகழ்ந்தன. 2019ம் வருடத்தில் சட்டபூர்வமாக வசந்த கரன்னாகொட மீது சாட்டப்பட்ட இந்த குற்றச்சாட்டு மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.