அரச தலைவரின் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் மிகப் பெரிய ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வலையெளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பீ.பி.ஜெயசுந்தர மேற்கொண்ட நிதி சம்பந்தப்பட்ட ஊழல், மோசடிகள் பற்றி நான் பல வருடங்களாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வந்தேன். எனினும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பசில் ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய அவர் தற்போது அரச தலைவரின் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக பல ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. உளவாளிக்கு எவ்வித அனுமதியும் பெறாமல், மக்களின் பணத்தை கொண்டு, கப்ரால் சம்பளம் வழங்கியுள்ளார். இதனடிப்படையில், பீ.பி.ஜெயசுந்தர மற்றும் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையானது ஆச்சரியத்திற்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படும் நிலைமையில், அமைச்சர் பசில் ராஜபக்ச கோரும் அனைத்தையும் நிறைவேற்றிக்கொடுக்கும் நிலைமைக்கு அரச தலைவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால், எதிர்வரும் காலத்தில் பிரதமர் பதவியையும் பசில் ராஜபக்சவுக்கு வழங்கக் கூடும் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தேங்காய் பறிக்கும் ஒருவருக்கு அலுவலக பணிகளை வழங்கினால் அந்த நபரால் அதனை செய்ய முடியாதது போலவே, பசில் ராஜபக்சவினால், நிதியமைச்சர் பதவியையோ, பிரதமர் பதவியையோ சரியாக கையாள முடியாது.
நாடு தற்போது சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது. சீனா, இலங்கைக்கு கடனை வழங்கி, கடனை திரும்ப செலுத்த முடியாத சூழல் உருவாகும் போது, முழு நாட்டையுமே சீனா சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கும்.
உலக வல்லரசாக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சீனா, இலங்கையை போருக்கான தந்திரோபாய மையமாக பயன்படுத்தலாம் எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.