
கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி எனக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி , தாவடியைச் சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்ததாக , வத்தளைப் பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின் 2 வருட கால விசாரணைகளின் பின்னர் , பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த 14ஆம் திகதி அவருக்கு எதிரான வழக்கில் அவரை நிரபராதி எனக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.
இதேவேளை அவரது மகளுக்கு ஒரு வயதும் நிரம்பாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு , தற்போது அவர் விடுவிக்கப்பட்டதும் தனது மகளை 15 வருடங்களின் பின் கண்டு மகிழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.