பிரித்தானிய தலைநகர் லண்டனில் விவாகரத்து கோரிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நாட்டைவிட்டு தப்பிய நபரை 20 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.
தென்மேற்கு லண்டனின் நார்பரி பகுதியில் கடந்த 2001 ஆகஸ்டு மாதம் குறித்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. 61 வயதான Zafar Iqbal என்பவர் தமது மனைவி 38 வயதான Naziat Khan என்பவரை குடியிருப்பில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் ரகசியமாக சொந்த நாடான பாகிஸ்தானுக்கு தப்பியுள்ளார். அங்கே சுமார் 20 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த Zafar Iqbal தம்மை நாடு கடத்தாமல் இருக்க சட்ட போராட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இருப்பினும், நீண்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு 2021 செப்டம்பர் மாதம் Zafar Iqbal பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் விமான நிலையத்திலேயே லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜரான Zafar Iqbal தம்மீதான கொலை குற்றத்தை மறுத்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. ஆனால் அரசு தரப்பு சட்டத்தரணிகள் Zafar Iqbal மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாக கூறி, மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதை நிரூபிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உடற்கூராய்விலும் Naziat Khan கழுத்து நெரிக்கப்பட்டு மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2005ல் அவர் மீது முதல் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுடன் குற்றவாளிகள் தொடர்பில் எந்த ஒப்பந்தமும் பிரித்தானியாவுக்கு இல்லை என்பதால் நடவடிக்கைகள் தாமதமானதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில், 2017ம் ஆண்டு பாகிஸ்தான் நிர்வாகம் Zafar Iqbal என்பவரை விசாரணை நிமித்தம் பிரித்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து 2021 டெப்டம்பர் 14ம் திகதி லண்டன் திரும்பிய அவரை பொலிசார் விமான நிலையத்திலேயே கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் தொடர் விசாரணை டிசம்பர் 5ம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.