அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில ஊடக அறிக்கைகளின்படி, இந்த தாக்குதல் இந்த வார இறுதியிலேயே நடைபெறக்கூடும் என கூறப்படுகிறது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலின்படி, ஈரானை சரணடைய வற்புறுத்தும் நோக்கில் புதிய தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்க இராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரிலாந்தில் உள்ள கேம்ப் டேவிட் ஜனாதிபதி ஓய்வு மையத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ட்ரம்ப்,
நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம். ஒரு கட்டத்தில் அவர்கள் இனிமேல் இதைத் தாங்க முடியாது என்று கூறுவார்கள். எங்களின் நோக்கம் வெற்றி பெறுவதுதான் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஈரான் தொடர்ந்து பொய் கூறி உண்மைகளைத் திரித்துக் கூறுவதால், அவர்கள் மீது நான் நம்பிக்கையை இழந்து வருகிறேன் என்றும் தெரிவித்தார்.
CBS News வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இதுவரை இல்லாத அளவிலான கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதலை திட்டமிட்டு வருகின்றன.
இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அமெரிக்கா–ஈரான் இடையிலான மென்மையான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் மீண்டும் நேரடி தாக்குதலில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
உலகளாவிய மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படாத வகையில், திங்கட்கிழமை நிதிச் சந்தைகள் திறக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கைகளை நிறைவு செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், எனினும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும், தாக்குதலை தொடங்குவதற்கான இறுதி அனுமதி (Go Order) யை ட்ரம்ப் இதுவரை வழங்கவில்லை.
இதற்கிடையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலைன் லெவிட், அமெரிக்கா வெற்றி பெறும்; ட்ரம்ப் பதவியில் இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாது" என்று தெரிவித்தார்.