×

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் நா. பகீரதன், தீச்சட்டியுடன் திடீரென சபைக்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூண்டாய் குப்பை மேடு தொடர்ச்சியாக தீப்பற்றி எரிவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் சுகாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக உறுப்பினர் நா. பகீரதன் தெரிவித்தார்.

குறிப்பாக, குப்பை மேட்டில் பொலித்தீன் மற்றும் பம்பஸ் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதால் அப்பகுதி மக்கள் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.இந்தப் பிரச்சினை தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலும் பலமுறை பேசப்பட்டுள்ளதுடன், ஊடகங்கள் மூலமும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும், இதுவரை பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.இதனை வெளிப்படுத்தும் வகையில், கல்லூண்டாய் குப்பை மேட்டில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்களை அடையாளப்படுத்தும் விதமாக நெருப்பு சட்டியுடன் சபைக்குள் நுழைந்ததாகவும் நா. பகீரதன் தெரிவித்தார்.

மேலும், கல்லூண்டாய் குப்பை மேடு தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் க. ஜெசீதனின் நடவடிக்கைகள் தமக்கு திருப்தியளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.யாழ்ப்பாண மாநகர சபையின் நடவடிக்கைகளுக்கு தவிசாளர் துணைபோவதாகவும், இந்த விடயம் தொடர்பில் தாம் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நா. பகீரதன் குற்றஞ்சாட்டினார்.

மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115