முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று காலை 9.00 மணிக்கு அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச நாளை நிச்சயமாக ஆணைக்குழுவிற்கு வருவார் என்றும், அவர் ஒருபோதும் பிரச்சினைகளில் இருந்து தப்பியோடுபவர் அல்ல. எனினும், சில சட்ட ரீதியான காரணிகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சில சட்ட ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாட இன்று மாலை சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் ஆலோசிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், வலுக்கட்டாயமாக அச்சுறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாக கபில சந்திரசேன நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு விடுக்கப்படுவது பாரதூரமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.