குருநாகல், உடவல்பொல பகுதியில் நான்கு மாடிக்கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகலில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச பாடசாலையில் படித்து வந்த 16 வயது மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவர் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தற்காலிகமாக நான்கு மாடிக்கட்டடத்தில் தங்கியிருந்தபோது, கடந்த 8 ஆம் திகதி அதிகாலை கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவர், மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூத்த மகன் ஆவார். அவருக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். அவரது தாய் ஒரு பாடசாலை ஆசிரியை ஆவார்.
இந்த பல மாடி கட்டடத்தின் தரைத்தளத்தில் ஒரு பிரபலமான தனியார் கண்ணாடி வணிகமும், மேல் மூன்று தளங்கள் குடியிருப்புகளுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
உயிரிழந்த மாணவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த மாணவர் உயிரிழக்கும் போது தனது காலணிகளை மாடியில் முறையாகக் கழற்றி வைத்துள்ளமை மற்றும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைபேசி என்பன அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இறப்பதற்கு முன்பு அவர் தனது தந்தையின் கைபேசியைப் பயன்படுத்தி வந்ததும், அதில் ஒரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இயங்கிக் கொண்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவர் அந்த நேரத்தில் ஒரு வகையான சூதாட்டத்தில் (விளையாட்டில்) ஈடுபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் நெருக்கமான தொழில்நுட்பமாக கைபேசிகள் இருந்தாலும், மறுபுறம், அந்தத் தொழில்நுட்பத்தின் முடிவு மரணமாகவும் அமையலாம். எனவே, இந்த மிகவும் அபாயகரமான அம்சத்தைக் கருத்தில் கொண்டு, உலகின் பல நாடுகள் வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைபேசிகளைப் பயன்படுத்துவதை தடை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.