திருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
குறித்த மாணவர்கள் ஆமணக்கு விதையை உட்கொண்டிருக்கலாம் என வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் குறித்த 22 மாணவர்களையும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கந்தளாய் பேராறு பகுதியில் தரம் 06 இல் கல்வி கற்ற 20 மாணவர்களும் 02 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.