பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை (19) கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரை தாக்கிய நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கூர்மையான ஆயுத தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபரும் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூர்மையான ஆயுதங்களை ஏந்தியபடி இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு சந்தேகநபர்கள், பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டை தாக்கி அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதன்பின்னர், சந்தேகநபர்கள் பிலியந்தலாவை நோக்கி தப்பிச்செல்வதாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, பிலியந்தலாவ பொக்குந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தப்பிச்சென்ற இரண்டு சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிளை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் சாரதி தனது கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார். இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸ் அதிகாரியை மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், சந்தேகநபரின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்ததில் அவர் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து காயமடைந்த 24 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மற்றைய நபர் தப்பிச்சென்றுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கொஸ் மல்லி என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் உத்வியாளரே காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்குள்ளான வீட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். போதைப்பொருள் தகராறு காரணமாக வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை மற்றும் பொரலெஸ்கமுவ பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.