தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணையை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு விசாரணையில் முக்கிய சாட்சியம் ஒன்று அம்பலமாகியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (24.06.2026) இடம்பெற்ற விசாரணையில் குறித்த சாட்சியம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக செலிசிட்டர் ஜெனரல், கோட்டாபய குறித்த முக்கிய புகைப்படம் ஒன்றை முன்வைத்துள்ளார்.இதன்போது, கோட்டாபய ராஜபக்சவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீரும் ஒன்றாய் இருக்கும் புகைப்படத்தை நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.இது குறித்து தெரிய வருகையில், கோட்டாபய ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா ஆகியோரின் கூட்டுப் புகைப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தனது கட்சிக்காரருக்கு நினைவில் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார். மேலும், பல்வேறு தரப்பினர் அரசியல்வாதிகளைத் தவறாமல் சந்திக்க வருவதால், அத்தகைய புகைப்படம் இருந்ததற்கான நினைவு இல்லாததில் ஆச்சரியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2017ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அசாத் மௌலானா சந்தித்தார் என்ற கூற்றை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முழுமையாக மறுக்கவில்லை. இருப்பினும், அந்தச் சந்திப்பின்போது கோட்டாபய தெரிவித்ததாக கூறப்படும் விடயங்கள், ஒரு அரசியல்வாதியால் சாதாரணமாக நடத்தப்படும் வகையிலான சாதாரண உரையாடல்களே என்று அவர் குறிப்பிட்டார்.