×

கிளிநொச்சியில் தொடர்ந்து இடம்பெறும் வீதி விபத்துக்கள் காரணமாக கிளிநொச்சி நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் வீதி போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஆகியோர் பதவி விலக வேண்டும் எனக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, இன்று(24.06.2026) பொது அமைப்புகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்த வேகத்தில் வாகனச் செலுத்துகைகள் மற்றும் மது போதையில் மோட்டார் சைக்கிள்களை செல்லுதல் போன்ற காரணங்களினால் வீதி விபத்துக்கள் அதிகரித்து விட்டதாக போராட்டக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களில் ஐந்து பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி - ஏ-09 வீதியின் பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட ஓய்வு பெற்ற அதிபரின் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இவரது இறுதிக்கிரியைகள் இன்று(24) இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், கிளிநொச்சியில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களை தடுக்குமாறு கோரி விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற அதிபரின் புகைப்படம் போட்ட பதாகைகள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.    

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115