
கனேடியப் பிரஜைகள், நிரந்தரமாக வதிவோர் ஆகியோரின் பெற்றோர் மற்றும் தாத்தா,பாட்டி ஆகியோர் ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக கனடாவில் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தினால் இந்த சுப்பர் வீசா நடைமுறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வீசாவின் ஊடாக இரண்டாண்டுகள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கனேடிய சமூகத்தின் இதயமே குடும்பங்கள் என குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வீசா நடைமுறையின் ஊடாக குடும்பங்களை நீண்ட காலத்திற்கு ஒன்றிணைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வீசா வழங்குவதன் மூலம் கனேடிய பிரஜைகள் மற்றும் நிரந்தரமாக வதிவோரிடமிருந்து சமூகத்திற்கு கூடுதல் சேவையை பெற்றுக்கொள்ள முடிகின்றது.
சுப்பர் வீசா பெற்றுக் கொண்டவர்கள் ஐந்து ஆண்டுகள் கனடாவில் வசிக்க முடியும் என்பதுடன் மேலதிகமாக இரண்டு ஆண்டுகள் இந்தக் காலத்தை நீடித்துக்கொள்ளவும் முடியும்.
எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த சுப்பர் வீசா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கனேடிய பிரஜைகள் மற்றும் நிரந்தரமாக வதிவோர் தங்களது பெற்றோர், தாத்தா,பாட்டி ஆகியோரை குறிப்பிட்ட காலத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சுப்பர் வீசாக்கள் பத்து ஆண்டுகள் வரையில் செல்லுபடியாகும் என்பதுடன் பல தடவைகள் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இரண்டு ஆண்டுகளில் இந்த வீசா காலாவதியாகும் என்பதுடன் ஒரே தடவையே பயணம் செய்ய முடியும்.