
பம்பலப்பிட்டி, லோரன்ஸ் மாவத்தை வாகன நிறுத்துமிடத்தில் தமிழ் நபர் ஒருவரிடம் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் கையில் கைவிலங்கு போட்டு அவர் பயணித்த மோட்டார் வாகனத்தை கடத்தி, 5 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகை மற்றும் 30ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திம்பிரிகஸ்யாய பிரதேசத்தை சேர்ந்த நபர் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்து வாகனத்தை நிறுத்த தயாரான போது பாதுகாப்பு தலைகவசம் அணிந்து நபர் ஒருவர் தான் பொலிஸ் அதிகாரி என கூறியுள்ளார். பின்னர் அந்த நபரின் கைகளுக்கு பின்பக்கமாக விலங்கு போட்டு வாகனத்தின் பின் பக்க ஆசனத்தில் அமர வைத்துள்ளார்.
சிறிது தூரம் வாகத்தை ஓட்டிச் சென்று மோதிரம் மற்றும் கைச்சங்கிலியை கொள்ளையடித்துள்ளார். பின்னர் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு பாதிக்கப்பட்ட நபரின் மனைவியை வரவழைக்குமாறு அச்சுறுத்தியுள்ளார். அந்த நபர் தமிழ் மொழியில் தனது மனைவியை அழைத்து நிலைமையை புரிய வைத்து சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி என கூறி கொள்ளையடித்த நபர், அவரை ஏ.டி.எம் இயந்திரம் ஒன்றிற்கு அருகில் அழைத்து சென்று 30ஆயிரம் ரூபாய் பணமும் பெற்றுள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட நபர், திருமண நிகழ்வு இடம்பெறும் மண்டபத்திற்கு அருகில் வரும் போது பொலிஸார் இருப்பதனை அவதானித்து வாகத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இந்த நிலையில் சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்ததென பொலிஸார் கண்டுபிடித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.