
நாட்டில் பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் இடியாப்ப தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தொடர்பான பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சு உட்பட பல அமைச்சுக்களின் செலவீன தலையீடுகள் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
வருடாந்தம் கதிர்காமத்திற்கு சுமார் 300,000 பக்தர்கள் வரும் நிலையில் அவர்கள் சுமார் 2,000 கிலோ பொலித்தீன் மாலைகளை எடுத்துச் செல்கின்றனர்.
இந்த மாலைகளை அவர்கள் தரையிலோ அல்லது மாணிக்க கங்கையிலோ வீசுகிறார்கள். அதேவேளை பிளாஸ்டிக் மாலைகள் தடை செய்யப்பட்டதன் பின்னர், இயற்கை அல்லது எண்ணெய்க் காகிதத் தாள்களை கொண்ட மலர்களை மாலைகளாக தயாரிக்க உற்பத்தியாளர்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக்கிற்கு பதிலாக இயற்கை மூலப்பொருட்களிலிருந்து இடியாப்ப தட்டுகளை உற்பத்தி செய்வதை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தயாரிப்பை பிரபலப்படுத்துவதற்கான சாத்தியமான திட்டங்களை அமைச்சின் அதிகாரிகள் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும் , சொப்பிங் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக மாற்று மக்கும் மக்கக்கூடிய பை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை இலங்கையில் நாளாந்தம் சுமார் 20 மில்லியன் சொப்பிங் பைகள் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுவதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.