
‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித் தொடரின் 14வது நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில் நடைபெற்றது.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் தானும் உள்ளதாக எதிர்க்கட்சியினர் அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் நானும் நிசங்க சேனாதிபதியும் இருப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்ததாக தெரிவித்த அவர்,
இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்து அறிந்த விடயங்களை பெற்றுக்கொள்ளுமாறு தான் தெரிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தகவல்களை கேட்க சென்றபோது, எனக்குத் தெரியாது. நான் மறந்துவிட்டேன். இதுபோன்ற தகவல்கள் தனக்குத் தெரியாது என்று அவர் கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் எப்போதும் இத்தகைய அபத்தமான குற்றச்சாட்டுகளையே கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குருணாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க ஈஸ்டர் தாக்குதலுடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.