
பருத்தித்துறை- சுப்பர்மடம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை, இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து, வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுப்பர்மடத்தைச் சேர்நத 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞனே மிக மோசமான அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன் பகையின் காரணமாகவே இந்த கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூவர் இணைந்து இரும்புக் கம்பியினால் மிக மூற்க்கமாக தாக்கியதில், இளைஞன் மயக்கமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை வீதியால் இழுத்துச் சென்று, குறித்த சந்தேகநபர்கள் வீசியுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் தாக்கப்பட்ட இளைஞன், கை மற்றும் கால்கள் முறிந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.