இந்தியாவின் மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்ற பஸ்சின் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதையடுத்து, ஒரு பெண் பயணி உடனடியாக செயல்பட்டு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார்.
ஜனவரி 7ம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், புனே அருகே ஷிரூரில் உள்ள வேளாண் சுற்றுலா மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மினி பஸ்சில் சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பினர்.
அப்போது டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டது. கை கால்கள் இழுத்த நிலையில், அவர் திடீரென சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தினார். இதனால் பேருந்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பயந்து நடுங்கி அழத் தொடங்கினர்.

அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த யோகிதா சாதவ் என்ற 42 வயது பெண், பேருந்தை தான் ஓட்டுவதாக கூறி அனைவரையும் அமைதிப்படுத்தி உள்ளார்.
அத்துடன் டிரைவரை ஓரமாக அமரவைத்துவிட்டு, பேருந்தை அருகில் உள்ள 10 கி.மீ தொலைவில் உள்ள கனேகான் கல்சாவை என்ற பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு டிரைவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் பஸ்சை ஷிக்ராபூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன் பின்னர் அனைத்து பெண்களையும் வகோலியில் இறக்கிவிட்டார். இந்நிலையில் திடீர் டிரைவரான பெண் கூறுகையில்,
தனக்கு கார் ஓட்ட தெரிந்ததால், பேருந்தை ஓட்டுவதற்கு முடிவு செய்ததாகவும், டிரைவருக்கு சிகிச்சை அளிப்பதுதான் முதல் முக்கியமான பணி என்பதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்தை ஓட்டிச் சென்று, அவரை அங்கே சேர்த்ததாகவும் யோகிதா கூறுகிறார்.
நெருக்கடியான நேரத்தில் பதற்றமடையாமல் துணிச்சலாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிய யோகிதாவிற்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.