
ஒரு காட்டில் ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. வழியெங்கும் கற்களும், முற்களும் இருந்தாலும், சமாளித்து ஓடிக் கொண்டிருந்தான்.
தொடர்ந்து ஓடியவன் ஒரு மலைச் சரிவில் விழுந்தான்.
நல்லவேளையாக அந்தச் சரிவில் இருந்த ஒரு மரத்தின் வேர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு தொங்கினான்.
தொங்கிக் கொண்டேக் கீழே குனிந்து பார்த்தால், சரிவின் கீழே ஒரு ஆறு ஓடியது.
அந்த ஆற்றில் ஒரு முதலை வாயைப் பிளந்து கொண்டு இவன் கீழே விழுவதற்காகக் காத்திருந்தது.
மேலே ஆற்றங்கரையில், புலி உறுமிக் கொண்டு காத்திருந்தது.
அதே நேரத்தில் அந்த வேர்களை ஒரு வெள்ளை எலியும், ஒரு கறுப்பு எலியும் ஆளுக்கொரு பக்கமாக கொறித்துக் கொண்டிருந்தன.
அப்போது பார்த்து அவன் தலைக்கு மேலே இருந்த ஒரு தேன்கூட்டிலிருந்து தேன் சிந்தியது.
இவன் அந்த தேனை நாக்கில் ஏந்தி சப்பினான்.
நீங்கள் வாழும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.
கீழே வாயைப் பிளந்து கொண்டு காத்திருக்கும் முதலைதான் மரணம். புலிதான் வாழ்க்கை. கறுப்பு, வெள்ளை எலிகள்தான் இரவும், பகலும். எந்த நேரத்திலும் அந்த வேர்கள் அறுந்து நீங்கள் முதலைக்கு உணவாகலாம். அந்த நேரத்திலும் ஒரு சொட்டு தேன் உங்களை சந்தோஷப்படுத்துகிறது. அந்த சந்தோஷத்தில் நீங்கள் மரணத்தை மறந்துவிடுகிறீர்கள். அனைத்தும் நன்றாக இருப்பதாக எண்ணிக் கொள்கிறீர்கள். ஆனால் அது உண்மையல்ல.