16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளை ஆராய்வதற்காக, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் அமைச்சு பங்குதாரர்களுடன் பூர்வாங்க கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(08.07.2026) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக ஊடகங்களின் சமூக, மனநல மற்றும் சுகாதாரத் தாக்கங்கள், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. குழந்தைகளின் மன மற்றும் உடல் நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுடன், 16 வயதுக்குட்பட்டோருக்கான அணுகலைத் தடை செய்வது தொடர்பில் தேசிய வழிகாட்டுதல்களை வரைவு செய்யும் பணியும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைபேசி அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்கு உதவும் ஒரு திட்டத்தையும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது என்றும், அது ஏற்கெனவே நேர்மறையான பலன்களைக் காட்டியுள்ளது என்றும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.