இலங்கை இன்று பிளவுபடாத ஒரே நாடாக இருப்பதற்கு யுத்த வெற்றியே காரணம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த, இராணுவத்தினரை கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (18.05.2026) திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முப்பத்தொரு ஆண்டுகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த தினத்தைக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். நாட்டைப் பாதுகாத்த எமது மாவீரர்கள் என்றும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.
எமது இராணுவ வீரர்களின் ஈடு இணையற்ற உயிர்த்தியாகத்தால் தான் இன்று நாடு பிளவுபடாமல் ஐக்கியமாக உள்ளது.
இது நாம் அடைந்த பாரியதொரு வெற்றியாகும். தற்போதைய அரசின் செயற்பாடுகள் எப்படியிருந்தாலும், மக்கள் மத்தியில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுகின்றது. மக்கள் மிகவும் நிம்மதியாக உள்ளார்கள்.
இந்தப் புனிதமான தருணத்தில் அரசியல் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. நாட்டைப் பாதுகாத்த வீரர்களை நினைவுகூர்வதே இன்றைய பிரதான நோக்கமாகும் என்றார்.