×

மல்வானையில் உள்ள அரச சொத்தான வீட்டை மாணவர்கள் பலவந்தமாகக் கைப்பற்றியபோது, பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை அரசின் அனுசரணையை அப்பட்டமாகக் காட்டுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார்.

பஸில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டை பல்கலைக்கழக மாணவர்கள் பொறுப்பேற்றமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் மாணவர்கள் அந்த வீட்டைத் தமக்குள்ளே துப்புரவு செய்து, எந்தப் பிரச்சினையும் இன்றி தங்கியிருக்கின்றார்கள்.

அரச சொத்தாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட அந்த வீட்டைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மாணவர்கள் அங்கு அத்துமீறிச் செல்லும் வரை பொலிஸார் வேடிக்கை பார்த்திருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இந்தச் செயல் ஒரு பயங்கரவாதச் செயலாகும். இது மிக மோசமான முன்மாதிரியாகும். இவ்வளவு பெரிய அத்துமீறல் நடந்தும், பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சரோ அல்லது அரசோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை.

இது அரசின் பின்னணி உதவியையே உறுதிப்படுத்துகின்றது. 323 கொள்கலன்கள் விடுவிப்பு மற்றும் திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மோசடி என அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆனால் எதற்கும் உருப்படியான நடவடிக்கை இல்லை.

பாரிய எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் இன்று என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றார்கள். ஜனநாயக நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசு இடமளிப்பது நாட்டின் எதிர்காலத்தைச் சீரழிக்கும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அரசிடம் கடும் கேள்விகளை எழுப்புவோம் என்றார். 

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115