
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே, பொருளாதார ரீதியில் நாட்டை மீள வழமைக்கு கொண்டு வருவதற்கான ஒரேயொரு வழிமுறை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டதை அடுத்து, சபையில் உரையாற்றிய அவர், தனது கன்னி உரையில் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொவிட் தடுப்புக்கான செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரவையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அரசியலமைப்பின் பிரகாரம், செயற்படுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
நாடு தற்போது இராணுவ மயமாக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றதாகவும் கூறிய அவர், அது பாரிய தவறான விடயம் எனவும் சபையில் தெரிவித்தார்.