
அம்மாவைக் கூடத்தில் கிடத்தி இருந்தார்கள்.
ஊதுவத்தி வாசம், தலைமாட்டில் சின்னதொரு அகல்விளக்கு. கழுத்தில் ஒரு ரோஜாப்பூ மாலை. என்றோ வாங்கியிருந்த பழைய பட்டுப்புடவை மேலே போர்த்தப்பட்டு இருந்தது.
சுதா அம்மாவின் உடலையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
சதா உழைத்துக் கொண்டிருந்த ஆன்மா. தான் பெற்ற மூன்று குழந்தைகளுக்காக ஓயாது உழைத்தவள். போதாக்குறைக்கு கட்டிக் கொண்ட பாவத்துக்காகப் புருசனுக்குச் சதா வடிச்சுக் கொட்டினவள்.
முதல் இரண்டும் ஆண் பிள்ளைகள். எப்படியோத் தட்டுத்தடுமாறி யார்யார் கால், கைப்பிடித்து படிக்கவைத்து ஆளாக்கிக் கரை சேர்த்து விட்டாள். மூன்றாவதாகப் பிறந்தவள் சுதா. ஆசைக்கென்று ஆசைப்பட்டு வயது நாற்பதுக்கு மேல் சுதாவைப் பெற்று எடுத்தாள். வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, தரித்திரம் தாண்டவமாடவில்லை… அதற்காகக் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஓஹோ என்று கொடுக்கவுமில்லை. சுதாவுக்கும் இரண்டாவது அண்ணனுக்கும் இடைவெளி பத்து வயது. கடைக்குட்டிதான் என்றாலும் செல்லம் எதுவும் கிடையாது.
அப்பா காலமான பின் எல்லாமே அம்மாவென்றானது. படிப்பு துளிர்க்க வேண்டிய வயதில் அண்ணன்களின் மேல் படிப்புக்காக சுதா தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அம்மாவுடன் ஒட்டுண்ணியாக வளர்ந்தாள். அம்மாவுடனே அத்தனை பேருக்காகவும் உழைத்தாள்.
அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய், வடாம், வற்றல், அப்பளம், முறுக்கு எனத் தினுசு வாரியாகச் செய்யும் போது கூடவே இருந்து உதவியாக இருப்பது. அவற்றை வீடு வீடாகச் சென்று அம்மா விற்று வருவது என அன்றாடப் பிழைப்பாக இருந்தது.
அம்மாவைப் பார்க்கும் போது வரவேண்டிய கண்ணீர் கூட உலர்ந்துவிட்டது.
அக்கம்பக்கத்தார், தூரத்து உறவினர்கள் என யார் யாரோ வந்து பார்த்துச் சென்றபடி இருந்தனர்.
இதோ… பெரியண்ணன் சிவா வந்துவிட்டான். கூடவே அண்ணியும், குழந்தைகளைக் காணவில்லை.
ஒரு மணிநேரங் கழித்து சின்ன அண்ணன் சேகரன் வந்துவிட்டான், அண்ணி குழந்தைகளுடன்.
சோகமாக அம்மா முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர். சுதாவுக்கு ஆறுதல் சொல்வது போல அருகில் அமர்ந்து அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தனர்.
சுதா அண்ணன்களின் முகத்தைப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் உறைந்து இருந்தது.
பெரியவன் சிவா, தான் காதலித்த பெண்ணையேக் கல்யாணம் செய்து கொள்ள நினைத்து, அம்மாவிடம் கேட்ட போது அம்மாவே முன்னின்று எளிய முறையில் கல்யாணம் செய்து வைத்தாள். சில நாள் தான்… மாதங்கள் கூட இல்லை. அதற்குள் தனிக்குடித்தனம் அது இது என்று ஆரம்பித்து கடைசியில் வீட்டோடு மாப்பிள்ளையாய் மாமனார் வீட்டிலேயேப் போய் அடைந்து கொண்டான். அவனாவது பரவாயில்லை எனச் சொல்லுமளவிற்கு சின்னவன் சேகரன் கழுத்தும் மாலையுமாய் சாதி மறுப்புக் கல்யாணமாய் வந்து நின்றான்.
பெரியவன் சேதி கேட்டு தாட்பூட் என்று குதித்ததோடு சரி… அவ்வளவுதான் கடமை முடிந்ததெனக் கிளம்பி விட்டான்.
அம்மாவால் என்ன செய்ய முடியும்… ஆசீர்வாதம் செய்ததோடு சரி.
அவனும் ஊர்விட்டு ஊர் மாறி வேலை நிமித்தமாக அங்கேயே இருந்து கொண்டான்.
இரண்டு அண்ணன்களும் பேருக்குத் தான்… … யாரோ ஊரார் போல வந்து நின்றனர்.
எல்லாவற்றுக்கும் சாட்சியாய் சுதாதான்…
“… ம்… ம்… வரவேண்டியவங்கள்லாம் வந்தாச்சி இல்லே… இனி ஆகவேண்டிய காரியத்தை மளமளன்னு பாக்கவேண்டியது தானே…”
யாரோ ஒருவரது குரல் இந்த நேரத்தில் இப்படித்தான் ஒலிக்கும். அது உறவினரானதாகவும் இருக்கலாம். ஊராருடையதாகவும் இருக்கலாம்.
அதன்பின் காரியங்கள் மளமளவென்று நடந்தேறின. இரண்டாம் நாள் பால் ஊற்றி, மூன்றாம் நாள் அஸ்தி கரைத்து வீட்டைப் புனிதப்படுத்த மந்திரங்கள் சொல்லி தீர்த்தம் தெளித்து படையலும் இட்டாச்சு.
சுதா தான் அம்மாவை நினைத்துக் கொண்டாள்.
எப்பேர்ப்பட்ட மனுசியவள்… உழைப்பில் ராட்சசி, எப்போதும் தன் வீட்டில் பசிப்பிணி வந்து விடக்கூடாது என்பதற்காக ஓயாமல் பம்பரமாய்ச் சுழன்றவள். அத்தனை உழைப்பிலும், அப்பா போன பிறகு தானே முன்னின்று, தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்கி வேலைக்கும் செல்ல வைத்துப் பார்த்தவள். கடைசிக் காலத்தில் தன்னையும் சுதாவையும் கரையேற்றுவார்கள் எனக் கனவு கண்டவள்… தனக்குப் பின்னால் சுதாவை எப்படியும் கல்யாணம் காட்சியென தங்கைக்கான கடமைகள் செய்வார்கள் எனப் பேராசை… பேராசை என்றுதான் சொல்ல வேண்டும்… அப்படியொரு பேராசை கொண்டிருந்தாள். ஆனால், அம்மா வாழும் காலத்திலேயே அவளது கனவும், பேராசையும் தவிடுபொடியான யதார்த்தத்தையும் கண்டு கொண்டது தான் அவளது அதிர்ஷ்டம். எல்லாம் பொய்யாய்… கனவாய்… பழங்கதையாய்ப் போனதுதான் மிச்சம். இருந்தாலும் அம்மாவுக்குச் சுதாவைப் பற்றிய கவலைதான் இருந்தது. அவளைக் கவனிக்காத தமையன்கள் நடுவே எப்படி வாழப் போகிறாளோ என்ற கவலைதான்.
ஒரு முறை சுதா கூட வேடிக்கையாகச் சொன்னாள்.
“அம்மா… நான் வேண்ணா எங்கேயாவது போயிர்றேனே… நீ கொஞ்ச நாளாவது நிம்மதியா… ரெண்டு அண்ணன்க வீட்லே இருந்திடேன்… இல்லே உனக்காக நான் செத்துக்கூடப் போயிர்றேன்மா…”
அம்மா ஓடி வந்து சுதாவை அணைத்துக் கொண்டாள்.
“அப்படி எல்லாம் பேசாதடா என் கண்ணு… நீ போயிட்டா நான் இருந்திடுவேனா… அடிப் பைத்தியமே… நீ இல்லாம என் வாழ்க்கை இல்லேடி… சுதா… நீ சொன்ன மாதிரி நான் உங்க அண்ணன் வீட்லே இருக்க முடியுமா…”
“ஏம்மா… சேத்துக்க மாட்டாங்களாமா… இல்லே எங்கியாவது முதியோர் இல்லத்திலே சேர்த்துருவாங்களா…”
“அடி அசடே… அதுக்கும் காசு வேணுமே… இவனுக எங்கியாவது காசி, ராமேஸ்வரம்னு கூட்டிப் போயி அநாதையா விட்டுட்டு ஓடி வந்திடுவாங்கடி…”
சிரித்தபடி அம்மா சொன்னாள். வயதாகி இருந்தாலும் அம்மா சிரிக்கும் போது ஒரு களை தெரியும். அந்தச் சிரிப்பின் களைதான் அவளது தன்னம்பிக்கை, சுதாவிற்கு அவள் தந்து விட்டுப்போகும் சொத்து என்பதைச் சுதா உணர்ந்து இருந்தாள்.
“சரி சுதா… காரியமெல்லாம் முடிஞ்சி போச்சி. இனி உன்னோட கவலை தான்… என்ன இருந்தாலும் இவ்வளவு நாளும் அம்மாவோடவே இருந்திட்டே…. இப்ப இந்த வீட்டை விட்டு வரச் சொன்னா உனக்குச் சங்கடமா இருக்கும்… அதனாலே இன்னுங் கொஞ்ச நாள் இங்கேயே இரு… உனக்கு எப்ப வரணும்னு தோணுதோ அப்ப எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தாரளமா நீ வரலாம்…இப்ப நாங்க கிளம்பறோம்…”
சுதா அவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்ற நேரம், வாசலில் இருவர் வந்து நின்றிருந்தனர்.
அவர்களில் ஒருவர், “சுதா… மேடம்… எங்க டிரஸ்ட் செயலர் இந்த ஆட்டோ வீல் சேரை உங்ககிட்டெ கொடுத்திட்டு வரச் சொன்னார்… நீங்க உங்க துக்கமெல்லாம் கழிஞ்ச பிறகு நிதானமா ஆபீசுக்கு வரச் சொன்னார் மேடம். ஆதரவற்ற இளைய, முதிய பெண்களுக்கு உங்களாலான வியாபார ஆலோசனை, ஆதரவு வார்த்தைகள், உங்க தன்னம்பிக்கை விடா முயற்சி குறித்த அனுபவமெல்லாம் சொல்லித்தரும் வேலையைக் கொடுத்திருக்காரு மேடம்…” என்று சொல்லிக்கொண்டே போனார்.
“அண்ணா… நீங்க வரச் சொல்லிக் கூப்பிட்டதுக்கு நன்றிண்ணா… ஆனா… அம்மா இருந்த வரைக்கும் எப்படி இருந்தேனோ அப்படியே நான் இருந்துர்றேன்… அம்மா விட்டுப் போன சொத்து அந்த தன்னம்பிக்கை மட்டும் எனக்குப் போதும்… இதோ இப்ப புது வீல் சேர் வந்திருச்சி… எனக்கு ஒரு வேலையும் கிடைச்சிருச்சி… நீங்க எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாம போயிட்டு வாங்க… எப்பவாவது இந்தத் தங்கையைப் பாக்கணும்னு தோணிச்சின்னா வந்து போங்க… அதுவும் கட்டாயமில்லே…”
இடையில் ஏற்பட்ட போலியோ தாக்குதலால் முடமாகிப் போனத் தன் இடது காலைப் பார்த்தபடி சுதா சிரித்தாள். அதில் அம்மா சிரிக்கும் போது தெரியுமே, அந்தக்களை தெரிந்தது.
எழுதியவர் – டி. எச். லோகாவதி