
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(வியாழக்கிழமை) வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. .
தடுப்பூசி போடப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் பயணிகள், நாட்டிற்கு வந்து பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் சோதனை முடிவைப் பெற்று வீடுகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டு 14 நாட்களுக்குப் பின்னர், இலங்கை வருகின்ற நபர், முதல்நாள், தனியார் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தனியார் சோதனைக் கூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை உட்படுத்தப்படுவார். அதன் பின்னர், 7 நாட்கள் அவர் தொடர்ந்து அதே விடுதியில் தங்கியிருக்க வேண்டும்.
குறித்த 7 நாட்களும், சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல அவருக்கு அனுமதி உண்டு. எனினும், அவர் மீண்டும் அதே விடுதியில் தங்க வேண்டும்.
7 நாட்களின் பின்னர், இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்றுறுதி இல்லையாயின், அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்.
தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாமல், இலங்கை வருகின்றவர்கள், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவர்களுக்கு முதலாம் நாள், 11 ஆம் நாள் மற்றும் 14ஆம் நாளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றுறுதி இல்லை என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்.