எஸ். மாணிக்கம்

கதையை எதில் இருந்து தொடங்குவது…? என்ற நீண்ட யோசனையில் இரவு நீள்கிறது…

மணி என்ன இருக்கும்?

புரண்டதில், ஜீரோ வாட்ஸ் பல்ப் மெல்லிய வெளிச்சத்தில்… அப்பா, அம்மா, அக்கா அசந்த உறக்கம் போல்… தலையணையோரம் கிடந்த செல்பேசி எடுத்து, ஏதோவொரு பட்டனை அழுத்த, வெளிச்சத்திரையில் மணி 12.10 காட்டியது. பேசியைத் திரும்பவும் அப்படியே வைத்ததும் போர்வையைத் தலை வரை இழுத்துப் போர்த்தினேன். துடைத்து விட்ட மாதிரி தூக்கம் சுத்தமாக இல்லை.

இரவும், யோசனையும் நீள்கிறது.

தேசத்தின் சுதந்திரம் நடுநிசியில்தானே கிடைத்தன, அப்படியே அந்த ‘அக்னி குஞ்சொன்று’ கண்டேன் தோன்றின… ஆமாம், அதிலிருந்தே தொடங்கிடலாம்? வெந்து தனிவதை நீங்களே வாசிக்க, வாசிக்கத் தெரிந்து கொள்வீர்களே…

அம்மாவுக்கு சுகர்… இரண்டாவது தடவையாகப் பாத்ரூம் போய் வந்து படுக்கிறாள்…

அப்பா, தண்ணீர் குடித்துப் படுக்கிறார்… குறட்டைச் சத்தம் வருகிறது, உறங்கிவிட்டார் போல்…

நான், இமைகள் மூடிக்கிடக்கிறேன்.

மூன்றாமாண்டின் இறுதிநிலையில் கல்லூரி மாணவன். எனது பெயர், கொழுந்தீஸ்வரன்… சிவனோட பெயர்தான். மூவரை வென்றான் மொட்டமலை கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் தீவிரமான பக்தர் அப்பா. கார்த்திகை, பிரதோஷம், அம்மாவாசையான நாட்களில் அம்மாவை வியாபாரம் பார்க்கச் சொல்லிவிட்டு, முன்பு பேருந்து, இப்போதெல்லாம் டிவிஎஸ் எக்ஸ் எல்லில் சென்று மனமுருகி, உருகி வேண்டியிருந்து வந்திருக்கிறார்.

அப்பா, அம்மாவுக்குக் கல்யாணம் ஆகி மூணு வருசத்துக்கு மேலாகியும் குழந்தைப்பேறு இல்லையாம், நந்தீஸ்வரருக்கு தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தைப் பாக்கியம் அமையும்னு கேள்விப்பட்டு அடுத்து வந்த பிரதோஷத்தின் போது கடையைப் பூட்டிவிட்டு, அம்மாவையும் அழைத்துப்போய் தயிர் வாங்கிக் கொடுத்து அபிஷேகம் பார்த்து, அலங்காரம் தீபாராதனையெல்லாம் பார்த்து வந்திருந்த மறு மாதமே அம்மா தாய்மையாம்.

பெண் குழந்தை.

கொழுந்தீஸ்வரரை நினைத்து, இருகரம் தூக்கி, அப்பா அப்படியொரு உருக்கம் அடைந்தாராம்.

இரு வீட்டு தாத்தா, பாட்டிகள், முன்னோர் பேரு, குலசாமி பேரு, குடும்ப முறைன்னு எல்லாம் ஏதேதோ மல்லுக்கட்டியும் ‘கொழுந்தீஸ்வரி’னு பெயர் வச்சுருக்கார்… மூத்தக்காவைத் திருமங்கலத்துலக் கட்டிக் கொடுத்திருக்கு.

இரண்டாவதும் பெண்தான்…

சின்னக்கா மரகதவள்ளி, இதுவும் சாமி பெயர்தான்… மொட்டமலை மரகதவள்ளி அம்மன்.

அப்பாவின் கைகர்யம்தானாம்.

ஆம்பள வாரிசு வேணும்னு மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் சென்று நெடுஞ்சான்கிடையாக விழுந்து, வேண்டி வர, நான் பிறந்திருக்கிறேன், இருந்த அம்மா வழி தாத்தா… பேர் வைப்புக்காக வாதாடியிருக்கார், ‘முதலும் முடிவும் அவனே, அவன் சிவனே…’ ன்னு ‘கொழுந்தீஸ்வரன்’

நானேதான்…

பள்ளி, கல்லூரி, ஆதார், குடும்பக்கார்டுகளில்தான் முழுப்பெயர் இருக்கும், மற்றவடி கூப்பிடு வழக்கில் ‘கொழுந்து…’தான், ‘ஈஸ்வரன்…’ஈஸ்வரா,’ தான்.

நகரை ஒட்டிப் புதிதாக விறுவிறுண்னு உருவாகிய லட்சுமி நகரில் மளிகைக் கடை, அதையொட்டியே வீடு. எனது ஒரு வயதில் இங்கே மாறி வந்தார்களாம். என்னுடைய வளர்ச்சி, கூடவே வியாபாரமும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கொழுந்தீஸ்வரி அக்காவின் கல்யாணம்… சேமிப்பின் பெரும்பகுதி கரைந்ததாம். ‘இன்னும் ஒண்ணு இருக்குங்க…’ அம்மாவின், வருத்தத்தில் என் இருப்பு இருக்காததிற்கு காரணம்? அப்பா என்மீது வைத்திருந்த அபரிதமான நம்பிக்கையாகக்கூட இருந்திருக்கலாம்.

எனக்கு விபரம் தெரிய, அப்பாவின் நம்பிக்கையும், வேண்டுதலும் அசுரத்தனமெடுத்ததைக் கண்டு நானேக் கூடச் சில நேரங்களில் மலைத்திருக்கிறேன். மூத்த அக்காவை ஏதோ படிக்க வைத்து வரன் அமைய உடனே எப்படி முடித்துக் கொடுத்தாரோ, அதேபடியான எண்ணத்தில்தான் சின்ன அக்காவையும் மார்க் அடிப்படையில் செலவு அதிகமில்லாத ‘த்திரி’ வி பெண்கள் கல்லூரிக்கு அனுப்புகிறார், என்றாலும் ‘மூத்தவ மாதிரிதாம் மரகதவள்ளிக்கும்’ என வெளிப்படையாகவேக் கொண்டிருப்பார், அப்பா.

என்னை..?

குடும்பத்தின் தன்மையை மாற்றப்போகும் கல்விக்காரன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம்…

‘அய்யா, -கொழுந்தீஸ்வரர் சாமியை அய்யா என்றுதான் பனிவோடு வணங்குவார், அந்த உணர்விலயே என்னுடன் பேசுகையில் ‘அய்யா’ என்பார்- நம்ம வம்சத்துல எல்கேஜீ, யூக்கேஜீனு போனதே நீதாம்யா உன்ன படிக்கவைக்க நான் மெனக்கிடல, கவசத்தோட பொறந்த கர்ணணாட்டம் குறைவே இல்லாத கல்விக் கற்றலோடு ஒவ்வொரு வகுப்பா சிறப்போடு வார, இது வேலை வாய்ப்பு வரை போகும்போது நம்ம வாழ்க்கையோட தரமே வேறமாதிரி ஆகிடும்யா… நான் வியாபாரி பொம்பளப் புள்ளைக்குனு ஒரு கணக்கு வச்சுருப்பேன் அத நீ நெனச்சா மாத்தலாம்யா… சின்ன அக்கா, கல்யாணத்தையே உயர்வா நடத்தலாம்,’ அப்போது இடைமறித்த அம்மா ‘அப்ப ஏம் பையனுக்கு?’ கேள்வியை வைக்க, ‘அட பைத்தியக் காரி… அய்யாவோட அப்போதைய தகுதிக்கு பெரிய பிஸ்னஸ்மேக்கர்களே வழிய வருவாங்க பொன்னு, பொருளு, பொண்ணோட’ என்பார்.

எந்த ரகமானவர் அப்பா?

அவரின் வியாபார எண்ணத்தில் என்னையும் ஒரு பொருள் நிலை வரிசையில் பார்க்கிறாரா…? தான் பிறந்து வந்த வழியில் இருந்து, மகன் மூலமாக ஒரு உயர்தலைக் காண விருப்புகிறாரா…? அல்லது காட்ட, வேகப் படுகிறாரா..? எது எப்படி ஆனாலும் நான்தானே காய்..! எனக்கானது என எவ்வித குறிக்கோளும் என்னுள் எழவே கூடாது, ஒருவேளை எழுந்துவிட்டால் ‘ம்ம்…’எழவே கூடாதுன்னுதானே அப்பாவின் ஒவ்வொன்றிலும் தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது, அப்புறமென்ன ‘எழுந்து விட்டால்…?’ அசரீரி குட்டு வைப்பதாக, எனக்கான சுயத்தை திரும்பியும் பார்க்க உரிமை இல்லையோ..! இப்படியான நெருடல்களில் பெருமூச்சே மிச்சமாகும்…

அப்பாவின் திசையில் என்னுடைய பயணப்படுதலில் அவரின் ஆசைகள், விருப்பங்கள், கொழுந்தீஸ்வரர் மீது கொண்டிருக்கும் வேண்டுதல் நடந்தே தீருமென்ற நம்பிக்கை… இதற்கெல்லாம் நானே சவாரிக்காரனாக உருமாற்றப்பட்டேனோ, இல்லை இயல்பாகவே நான் மாறி விட்டேனோ சரியாகத் தெரியவில்லை. நீண்ட மூங்கில் கொண்டு சமநிலைப் படுத்தி, கயிற்றில் அடியெடுத்து வைத்து வைத்து நடப்பாரே கலைக்கூத்தாடி அப்படியே என்னுடைய நிலை தீர்க்கமாகின. அதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்தான்… ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்… ‘ம்…புரியுது, புரியுது… தொண்ணூறு விழுக்காடு குக்கர்மயமாச்சே இப்பப் போய் இந்தப் பழமொழியா…?’ங்கறது. மனுஷங்களோட வாழ்வியல் முறைகள் எப்படி மாற்றம் கண்டாலும் சில, அடையாளச் சொற்களாக நம்மில் சிலதுகள் பதிந்து விடுவதுண்டு.

அப்பாவுக்கான எனக்கானதுபோல் எண்ணங்களைத்தான் சொல்கிறேன்!

ஓ அந்தப் பருக்கையை மறந்துட்டேன்ல…

சென்னை கவுன்சிலிங்கிற்கு சென்றிருந்தேன்… முதல்‘சிட்டி’ப் பார்வை… பரவசம்… உயர உயரமான கட்டிடங்கள்… முடுக்கிவிட்ட சாலைப் பயணப்பாடு, பிரமாண்டங்கள் கண்டு வியந்திருக்கையில் ‘இங்கதான் அய்யா வேலைக்கு வரணும், வாழ்க்கையத் தொடங்கணும்,’ இப்படி ஆரம்பித்து நிறைய கனவோட்டங்களை பொதுவெளியென அறியாது பேருந்து, ஆட்டோ பயணத்தில் ஒப்பித்தபடியே வர, நான் கொஞ்சமும் முகம் காட்டாத இயல்புடன், சராசரிக்குத் திரும்பி விடுவேன். அப்போதெல்லாம் சந்தோஷ் சுப்பிரமனியம் ஜெயம் ரவி மனத்திரையில் வந்து போவார்… படம் பார்க்கையில் அடிக்கடி என்னை ஓரக்கண்ணால் கண்டு நமட்டு சிரிப்பு சிரிக்கும் சின்ன அக்காவும்தான்.

‘பஸ்சில் சங்கரன்கோவிலுக்குச் செல்கையில் இதுலாம் பெரிய காலேஜ்போலனு உதடு பிதுக்கிக்கொள்வேன். இன்னைக்கு… இதுல என் அய்யா படிக்கப்போறாரு,’ காலேஜ் முதல் நாளில் அப்பா, இப்படிச் சொன்னதை கர்வம்னு எடுக்க முடியாது, தன்னுடைய தரம், தகுதிக்கான அங்கீகாரத்தின் வெளிப்பாடு என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். அடுத்து வந்த ஆண்டுகளிலும், பணம் கட்ட வருகையில் ஞாபகம் வைத்து அதையே சொல்லணும் போல் சொன்னதைத்தான் எதார்தமாக எடுக்கத் தோன்றவில்லை, சூழ்நிலையில், மகன், தடமாறிடக்கூடாதுன்னு சமிக்ஞை காட்டுகிறாரோ? அப்பா… ‘ச்சேச்சே…அப்படியிருக்காது’ னு உறுதியற்ற யோசனையில், இருக்கலாம்னே நினைத்துக் கொண்டு, வேறு சில குணாதிசயங்களும் அப்பாவுக்குள் ஒழிந்து கிடக்குமோன்னு எண்ணவும் தோன்றியது?

சட்டை மாட்டும் போதெல்லாம் சென்னை, வேலை, இப்படித்தான் இருத்தல் வேண்டுமென்ற இவைகளே மனம்கொள்வதானது.

‘உனக்கு..? சென்னை…வேலை…நகர இருப்பு… அந்த அனுபவங்கள்… ஏற்ப்பு இல்லையா..?’ இந்தக் கேள்வியைத்தானே முணுமுணுக்குறீங்க… நான், அப்பாவின் எண்ணப்பாதைக்கான, அவரின் விருப்பப் பயணத்துக்கான, இடரற்ற கனவு ஆசை நகர்வுகளுக்கான, மலைக் கொழுந்தீஸ்வரர் அடைதல் நம்பிக்கைக்கான மகன்… எனக்குன்னு தனிப்பட்ட ஒன்றெல்லாம் பெரிதொன்றும் இல்லையெனில் திணிப்பு கொண்டதில்தான் கொஞ்சம்… அதுகூட இல்லாவிடால் இக்கதையே இல்லை என்றாலும், அந்த ‘கொஞ்சம்’ அதாவது உங்கள் கேள்வி… என் முன்பாக வந்து நின்று விட்டதே…?

கடை வியாபாரத்தில் அப்பாவுக்குத் துணையாக அம்மா, அக்கா இருக்க நானும் சிறுவுதவியாக இருக்கலாமேன்னு ‘அப்பா… சிட்டை, பணம் தாங்க பாஜாருக்கு…’ முளையில் கிள்ளுவதுதாக ‘கை’ சைகையில் ‘நானே பாத்துகறன்யா,’ காட்டுவார். நான் எவ்வளவு கெஞ்சினாலும் விடவே மாட்டார், டூ வீலரில் கிளம்பி போவார், காலேஜ் விடுப்பு, அப்பாவின் சிரமத்தில் பங்கெடுக்க, மறுபடியும் ‘சரக்கு வாங்க போறேம்பா…’ என்றாள்.‘வேண்டாயா,’ கிளம்ப தயாராவார் ‘சொல்லுமா…’ சாடையாக அம்மாவை பார்க்க ‘நீங்க கடையில இருங்களேன் அவன் போயிட்டு வரட்டும்,’ அவ்வளவுதான் ‘வாயமூடு அய்யா படிக்கனும் அதுக்கான வேலைக்கு போகணும்,’ கோபம் காட்டுவார். சின்னக்கா சொன்னாலும் கேட்கவே மாட்டார். ‘லேப்டாப்ல எதையாவது படிங்கையா… கடைய கவனிக்கத் தான் நாங்க இருக்கம்ல… கொழுந்தீஸ்வரர் கொடுத்த அய்யா வியாபாரியோட மகன், வியாபாரி கிடையாது,’ அப்பாவின் செயல், பேச்சு… முதல் தடவையாக என்னுள் குழப்ப சுழற்சியானது?

ஏன் இப்படியான ஒரு கற்பனையில் இருக்கிறார்… சென்னையில் வேலை, அங்கே வாழ்க்கைத் தரம் மட்டும்தான் உயர்வா..? அதை வைத்து விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடலாமா..? தன் எண்னத்தின்பால் மாயத் தோற்றமொன்றை அப்பா கட்டமைத்து வத்திருக்கிறாரே… ஓர்வித ரசவாதப் போக்கு அப்பாவின் முனைப்பு…

முன்பு மாதிரிலாம் படிச்சதுக்கு வேலை… நல்ல வேலை என்றெல்லாம் கிடைப்பது, அடைவது கேள்விதான் என்பதாகவே ‘டியூட்டர்’ அவ்வப்போது பதிவு செய்கிறார். இவ்வளவு விபரம், விளக்கம் சொல்ல முடியுமா?அப்படியேக் கூறினாலும் ‘அய்யா, உலகம் அழியாது சனங்க வாழத்தான் செய்யும். நாள் போக்குல அதது அப்படியப்படியே நடக்கும் நீங்க படிக்கறத மட்டும் பாருங்க,’ என்று சாதாரணமுடன் நகர்ந்து விடுவார் அப்பா.

தாமதமாகும் தேர்வு, இன்னொரு ஆண்டு படிப்பு நிறைவு, வேலை, எல்லாம் கனம்போல் அழுத்த, ‘மாமாவ பாக்கணும்னு உம்பேத்தியும், பேரனும் நச்சரிக்குதுக, தம்பிய ஒருவாட்டி வரச்சொல்லுமா,’ பேசியில் அக்கா கேட்டுக்கொண்டதை அம்மா ஞாபகப்படுத்தவும் தளர்வைப் பயன்படுத்தி, டூ வீலரில் அன்று திருமங்கலம் போனேன்.

மாமா, பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்காரர், வீட்டில்தான் இருந்தார்.

வீட்டில் செய்து அம்மா கொடுத்துவிட்ட, ரவைப்பணியாரம், பருப்பு வடை, பிள்ளைகளுக்கு ஆளுக்கொண்னு எடுத்து தந்து, அவர்களுடன் விளையாடினேன். மதிய சாப்பாட்டுக்குப் பிறகு,

‘என்னடா தம்பி அப்பா என்ன சொல்றார்..?’ அம்மா விசயம் தெரியப்படுத்திருப்பார் போல்.

‘அப்பா, பெரிய கோட்டை கட்டி வச்சுருக்காருக்கா.’ பெருமூச்சு விட்டேன்.

‘இதோ பாரு மாப்ள சென்னைலாம் இனிமே சுத்தமாவே சுத்தப்படாது அங்க இருக்கறவங்க பொலம்பித் தள்ளிட்டு இருக்காங்க தெரியும்ல, அரிசி, பருப்பு, உப்பு, வத்தல், கத்தரிக்கா, தக்காளி, வியாபாரமெல்லாம் தன்னோட போகட்டும், மகன் படிச்சு வேற நெலமைக்கு வரட்டும்னு மாமா நெனக்கிறது, ஆசப்படுறது தப்புனு சொல்ல முடியாது, இப்ப சூழ்நிலை மொத்தமா புரண்டுப் போச்சே… காலேஜ் முடிச்சு வேலையத் தேடி… அது கெடச்சு சம்பளம் பாத்து… இன்னொரு அக்காவக் கட்டிக் கொடுத்து, அடுத்துதான் உனக்கானதை..?’

மாமா நிறைய பேசினார், எனக்கோ, காலேஜ் போதும்… சென்னை வாசமே வேணாம் என்கிறாரா…

‘ஏங்க நீங்க வேற அவன குழப்பிட்டு,’ அக்காவின் தடுத்தலை காது வாங்காது, மாமாவே

‘விருதுநகர்ல குறிப்பிடும்படியா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கிடையாது, நமக்கு கைவந்த சுயமான வியாபாரம் சரின்னு மட்டும் சொல்லுங்க காலேஜ் முடியவும் ஏற்பாடு பண்ணிறலாம்…’

அப்போது அக்கா, தன் கண்ணசைவில் ஏதோ ‘வேண்டாம்’ உணர்த்த, அவர் நிறுத்தினார்.

‘அவ்வளவு முதலீடு இருப்பு உள்ள அப்பாவுக்கு மகனா நான்?

மாமா மேலும் கூற வந்து, அக்கா தடுத்தது,

மாமாவின் கடைசி தங்கை, சுதாவை எனக்கு பேசிமுடித்தால் டவுன்ல டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வச்சு தந்து, குறிப்பிட்ட ரொக்கமும் தருவாங்களாம். அம்மாகிட்ட, அக்காவின் தகவலில் அந்த ‘ரொக்கம்’ சின்னக்காவின் கல்யாணத்துக்கான உத்தரவாத உணர்த்தல் என்றும் தெளிவாகவேத் தெரிந்தது.

எனது விலைப்பட்டியலை கவனித்து விட்டீர்களா..!

பஜாருக்கு, சமான்கள் வாங்கப் போவதில் தினமும் வாக்குவாதம்தான் முடிவாக அப்பாவேக் கிளம்பி விடுகிறார். இன்றும் வழக்கமாக அதே… அம்மா, சின்னக்கா சொன்னது போதாதுன்னு சாமான்கள் வாங்க கடைக்கு வந்தவர்களும் எனக்கு சாதகம் பேச, அப்பா, கோபமானார். வியாபார இடத்தில் இது தேவையாயென வீட்டுக்குள் நுழைந்தேன். கொஞ்ச நேரத்தில்,‘அய்யா,’னு அப்பா,வந்தார். எனது உச்சந்தலையை நீவினார். தோளுக்கு வளந்த மகன் என நினைத்தாரோ என்னவோ..? எதும் அவர் பேசாதிருந்ததை நான் பயன்படுத்த ஆரம்பித்தேன்…

‘அப்பா, நான் பேசிக்கறேம்பா… தொடர்ந்து மகன் பஜாருக்கு போய் வந்தா கடை வியாபாரத்துலேயே கவனம் போயிரும், படிப்பு ஏறாமப் போயிருமோன்னு பயப்படுறீங்க, அதான் பிடிவாதம் காட்றீங்க, இது தேவை இல்லாத பயம்னுதான் சொல்வேன், குடும்பம் வியாபாரம், வருமானம், சின்னக்காவுக்கான தேவை எல்லாமே எனக்கும் புரியும்பா நாளை நடக்கப் போறதுக்காக, இன்னைக்குச் செய்ய வேண்டியவைகளில் ஒதுங்கி நிக்க முடியலப்பா, அதுவுமில்லாம இந்த வயசுலேயும் நீங்க உடம்பு வருத்திக்கறது யாருக்காகப்பா? புள்ளைகளுக்காகத்தானே… அதையே நான் அப்பாவுக்காக பங்கெடுத்துக்க நினைக்கிறேன் ஏப்பா விடமாட்றீங்க? நாளைக்கு எது நடக்குமோ அது நல்லபடியாகவே நடக்கும்பா, மலைக் கொழுந்தீஸ்வரர் ஈசன் கைவிடவே மாட்டார்னு உறுதிபட நம்புறேம்பா, அத நீங்களும் நப்புங்கப்பா,’ பேசி நிறுத்தினேன்.

சின்ன அமைதி… அப்பவும் எதுவுமே அப்பா, பேசவில்லை.

‘அய்யா…’ அப்பா, கூப்பிடுகிறார்.

திரும்பினேன், போர்வை விலக்க, ‘என்னையா… தூங்கவே இல்லையா..?’ எழுந்து உட்காருகிறார், நானும். ‘இல்லப்பா,’ என்பதாகத் தலை உலுக்க, தண்ணீர் சொம்பு எடுத்து தருகிறார். தண்ணீர் குடிக்கிறேன்.

‘இதோ பாருய்யா காலேஜ் திறக்கும் வரை சாமான்கள் வாங்க பஜாருக்கு போயிட்டுவாய்யா… போதுமா? இப்ப மனச ஒரு நிலப்படுத்தி தூங்கு சரியாய்யா’

அப்பா, சொல்லவும் என்னை சுற்றியிருந்தவை அப்போதே பொசு பொசுவென ஆனதுபோல் உள்ளுணர்வு, மலைக் கொழுந்தீஸ்வர் கருவரை முன் கரங்கள் கூப்பி நெடிஞ்சானாக விழுந்து வணங்கி, எழுவது போன்று இமைகள் மூடி, திறக்கிறேன். முகத்தில் தெளிர்ச்சி கண்டுவிட்ட, அப்பா ‘அய்யா… படுத்துத் தூங்குங்க,’ என்கிறார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal