எழுதியவர் – சசிகலா திருமால்

இரவின் நிசப்தத்தைத் தின்னும்
கடிகார முட்களைப் போலவே
எனை மெல்ல தின்று விழுங்கி
விம்மி வெடித்துக் கொண்டிருக்கிறது
நின் நினைவுகள்…
நீயில்லா நேரங்களில்
நீயிருந்த நேரங்களைக் கதைத்திட
தவறியதேயில்லை…
என் கடிகார முட்கள்…
உறக்கமற்ற இரவுப்பொழுதை
இரக்கமற்ற தாளத்தோடு
இதயத்துடிப்பின் வலியோடு
நகர்த்திக் கொண்டிருக்க…
பின்னோக்கி செல்லவியலாத
நொடி முள்ளாய் நானும்…
உந்தன் நினைவுகளிலிருந்து
பின்வாங்க முடியாமல்
துடித்துக் கொண்டிருக்கிறேன்…
இறந்துவிட்ட நொடிகளாய்…