
100க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மகாத்மா காந்தியடிகளுக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கின்றன. உலகில் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத அரிய பெருமை இது. காந்திஜியின் அஞ்சல் தலைகளைப் பற்றிய சில சுவையான தகவல்கள் இதோ…
- இந்தியாவைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளில் காந்திஜிக்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின்எண்ணிக்கை சுமார் 300.
- வெளிநாடுகளில் அமெரிக்கா காந்திஜிக்கு முதன்முதலில் 1961 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இரண்டு அஞ்சல் தலைகளை வெளியிட்டுச் சிறப்பித்தது. இரண்டாவதாக காங்கோ 1967- ஆம் ஆண்டில் வெளியிட்டது.
- 1969 ஆம் ஆண்டு காந்திஜியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் நினைவாக, இங்கிலாந்து உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் அஞ்சல் தலைகளை வெளியிட்டு மகாத்மாவைச் சிறப்பித்தன.
- காந்திஜிக்கு முதன்முதலில் அஞ்சல் அட்டை (Post card) வெளியிட்ட வெளிநாடு போலந்து. இன்றுவரை இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கிறது.
- காந்திஜிக்கு முதன்முதலில் நினைவு உறை (Commemorative Envelope) வெளியிட்ட இந்தியா அல்லாத முதல் வெளிநாடு ருமேனியா.
- காந்திஜிக்கு முதன்முதலில் அஞ்சல் முத்திரை (Post Mark) வெளியிட்ட வெளிநாடு மியான்மர் (முன்னர் – பர்மா). அதையடுத்து, செக்கோஸ் லோவாக்கியா மற்றும் லக்சம்பர்க் நாடுகள் அஞ்சல் முத்திரை (Post mark) வெளியிட்டுச் சிறப்பித்தன.
- காந்திஜி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நினைவாக, பூட்டான் (இரண்டு அஞ்சல் தலைகள்) மற்றும் சோமாலியா வெளியிட்ட ஐந்து அஞ்சல் தலைகளும் இந்தியாவில் (நாசிக்) அச்சிடப்பட்டவைகள் ஆகும்.
- ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2007 ஜூன் 15 அன்று, காந்திஜியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐ, சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non-violence) அறிவித்து காந்திஜிக்குச் சிறப்பு செய்தது. அதன் பிறகு, 2009, அக்டோபர் 2 அன்று அஞ்சல் தலையையும் வெளியிட்டுச் சிறப்பித்தது.
- இந்தியாவில் காந்திஜிக்கு முதல் அஞ்சல் தலை அவரது 80-வது பிறந்த நாள் அன்று வெளியிடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு 4 தபால் தலைகளுக்கான வடிவமைப்புப் பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த விஷயத்தில்அதிக அக்கறையுடன் செயல்பட்டார். துரதிருஷ்டவசமாகத் தனது 80-வது பிறந்த நாளுக்கு 8 மாதங்களுக்கு முன்பே ஜனவரி 30, 1948 அன்று காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது 80-வது பிறந்த நாளில்வெளியிட முடிவு செய்யப்பட்ட தபால் தலைகள் அவரது நினைவாக ஆகஸ்ட் 15, 1948ல் முதல் சுதந்திர நினைவு நாள் அன்று வெளியிடப்பட்டது.
- சுதேசியாகவே வாழ்ந்து, தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அற்பணித்த அந்த மகாத்மாவின், முதல் அஞ்சல் தலை சுவிட்சர்லாந்தில் அச்சடிக்கப்பட்டது. 1925-ம் ஆண்டு முதல் இன்று வரை வெளிநாட்டில் அச்சிடப்பட்ட ஒரே இந்திய அஞ்சல் தலை காந்திஜியின் அஞ்சல் தலைதான். அதே ஆண்டில் தான் நாசிக்கில் அஞ்சல் தலை மற்றும் நாணயம், ரூபாய் தாள்கள்அச்சிட அச்சகம் நிறுவப்பட்டது.
- இந்தியாவின் கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி அவரது அதிகாரப்பூர்வமான தேவைகளுக்குக் காந்திஜியின் அஞ்சல் தலைகளைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்தபோது, அரசு தேவைகளுக்காக உபயோகப்படுத்தப்படும் அஞ்சல் தலைகளில் (Service) சேவை என்று அச்சிடப்பட்டு பயன்படுத்தப்பட்டது. அந்த அஞ்சல் தலைகளில் ரூபாய் 10 மதிப்பு கொண்ட (Service) சேவை முத்திரை இடப்பட்ட அஞ்சல் தலைகள்தான் உலகிலேயே மிகவும் குறைவாக அச்சிடப்பட்ட அஞ்சல் தலையாக இன்று வரை உள்ளது. 100 அஞ்சல் தலைகளே அச்சிடப்பட்டன. இதுதான் இந்தியாவின் மிகவும் அரிதான அஞ்சல் தலையாக இன்று வரை இருந்து வருகிறது.
- இந்தியா இதுவரை 48க்கும் மேற்பட்ட காந்திஜி அஞ்சல் தலைகளையும் 200க்கும் மேற்பட்ட சிறப்பு முத்திரைகளைக் கொண்ட தபால் உறைகளையும் மற்றும் அஞ்சல் அட்டைகளையும் வெளியிட்டுள்ளது.