
அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார். ஆளும் கட்சிக்குள் பல்வேறுப்பட்ட முரண்பாடுகள் மேலோங்கியுள்ள நிலையில் அவரது வருகை குறித்து பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் அறுதல் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பெசில் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவித்த அவர், எரிப்பொருள் விலையை மீண்டும் குறைத்து அரசாங்கம் தொடர்பில் சிறந்த பிம்பத்தை உருவாக்குவது இவரது தற்போதைய நோக்கமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எரிப்பொருள் விலையேற்றத்தின் நியாய தன்மையை ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதனை மீண்டும் குறைப்பது என்பது அரசாங்கத்திற்குள் காணப்படும் நெருக்கடிகளை வெளிப்படுத்துவதாக அமைவதுடன் நம்பக தன்மைக்கும் சவாலாகி விடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகி அமைச்சராவது என்பது ஆளும் கட்சிக்குள் எரியும் தீயில் பெட்ரோலை ஊத்தும் அல்லது சிதறியுள்ள கட்சியை ஒன்றிணைப்பதாக அமையலாம் எனவும் அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்..