எழுதியவர் – டினோஜா நவரட்ணராஜா

துயரங்களும் போராட்டங்களும் சவால்களும் இல்லாமல் வாழ்க்கை இனித்து விட போவதில்லை. ஏராளமான தோல்விகளும், ஏமாற்றங்களும், புறக்கணிப்புக்களும், புரிதல்கள் இழந்த கையறு நிலைகளுமே புதியதொரு பயணத்தின் வழித்துணையாக அமையும். உறவுகளும் உணர்வுகளும் நிரந்தரமற்றவை. இந்த நொடி புன்னகையை தரும் உறவுகளே அடுத்த நொடி பெருந் தாழாத்துயரையும் திணிக்க வல்லவர்கள். அதேபோல் தான் உங்களது உணர்வுகளும்….
தங்களது சுயத்தை தங்களுடனேயே தக்கவைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு செயலோ இன்னொருவருடைய வார்த்தைகளோ தங்களை தீர்மானிக்காதவாறு பார்த்துக்கொள்கையில் பிற உந்துதல்கள் தங்களது தனிப்பட்ட பயணத்தில் உதைக்காமலிருக்கும். புரிதல்கள் அற்ற இடத்தில் போராடுதல் என்பது கூரான கத்திமேல் வேகமாக ஓடுவதற்கு சமம். தங்களை நிறையவே காயம் செய்ய வேண்டி இருக்கும். அதையும் தாண்டிய புரிதலுக்கான பிரயத்தனங்கள் மிகவும் அழகானவை. ஆனால் அதனை இப் பிரபஞ்சம் அத்தனை எளிதில் உணரந்துகொள்ளவதே இல்லை.
எதுவும் நிரந்தரமற்ற இப்பரப்பில் உடனிருந்த ஒன்று அற்றுப்போனபின்னர் தான் அதையெண்ணி அலைவதெல்லாம் நிகழும்.
ஆக புரிதலுக்கான பெரும்பிரயத்தனங்கள் பிரியோசனம் அற்றவையே… கையிலிருந்து பறக்க துடிக்கும் பறவையை பறக்க விடுங்கள் அன்றேல் அதன் உதடுகளும் கால் நகங்களும் தங்களையே கீறிக்கிழிக்கும். தங்களது மனதை விட பெரும் சக்தி வேறொன்றும் இல்லை. தங்களை தீர்மானிக்கவும் வடிவமைக்கவும் தங்களால் இயலும். இன்னொரு பொருளிற்கானதோ உறவிற்கானதோ பிரயத்தனத்திலும் பார்க்க செம்மை செய்தலையும் அதன்படி நகர்தலிற்குமான தூண்டுதல்களை தங்களிற்கு தாங்களே கொடுத்துக்கொள்ளுங்கள். இரஞ்சுதலை விட நகர்தல் ஆரோக்கியமானது.