
முதல் மனைவி தனது மகளுடன் இணைந்து கணவனின் இரண்டாவது மனைவியை கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் திம்புள்ள-பத்தனை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவு பகுதியைச் சேர்ந்த 42 வயதான விஸ்வநாதம்மா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மிக நீண்ட நாட்களாக இரு மனைவிகளுக்கும் இடையில் பிரச்சினை நிலவி வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் தனது மகளுடன் இணைந்து, முதலாவது மனைவி, இரண்டாவது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளதுடன் , அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பிரதேசவாசிகளுடன் இணைந்து பொலிஸார், சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கணவனுடன் வாழ்ந்த வந்த நிலையிலேயே, இரண்டாவது மனைவியை, முதலாவது மனைவி கொலை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
முதலாவது மனைவி தனது கணவரை விட்டு பிரிந்த நிலையில், கணவர், இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
அதன் பின், மிக நீண்ட நாட்களின் பின்னர், முதலாவது மனைவி மீண்டும் வருகைத் தந்த, இரண்டாவது மனைவியை கொலை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளை திம்புள்ள-பத்தனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.