எழுதியவர் –தூரா.துளசிதாசன்

வேர் முளைத்து
விழுதுகளாக மண்ணில்
கரம்பிடித்த எம்சிரசை
வெட்டி எடுத்து
விறகாக சாம்பலாக்கினீர்கள் ..
நீர்ச்சுனைகளில் மலர்ந்து
மணம்வீசினோம் ஆம்பலாக..
தடாகத்தின் வயிற்றை
கிழித்தெடுத்து எம்மை
அமிலத்தில் அமிழ்த்தினீர்கள்..
விடியலின் பிறப்பிற்காக
கூவினோம் குயிலாக…
சிறகை பிய்த்தெறிந்து
மென்று சாப்பிட்டு
ஏப்பமிட்டு வீசினீர்கள்…
இதயப் பைகளில்
தேசத்தின் நேசக்காற்றை
அடைத்து குருதிமையை
பருகிய கரிக்கோல்கள்
எம்மை காளானாய்
பிடுங்கி யெறிந்தீர்கள்…
அதிகார நாற்காலியில்
அமர்ந்து அடக்கியே
காலணியால் நசுக்கினாலும்
உயிர் மூச்சை
பிடித்து இறுத்தி,
உயிர்த்தெழுவோம் நாளை
சிலுவை மரங்களாய் …!
எம் மெய்க்கூட்டின்
உயிரை பிரித்து
இடுகாட்டில் புதைத்தாலும்
மழுங்காது புரட்சியான
சிந்தனைகளோடு மலர்வோம்
கல்லறை தேசத்து
பூக்களாய்…!