
இயற்கையை நேசிக்கும் மனிதர்கள் மகத்துவம் மிக்கவர்களாக இருப்பர் என்பது நிதர்சனம்…’ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை’ என்கிறது ஒரு பொன்மொழி
பூமி மற்றும் அது சார் இயற்கை போன்றவற்றைக் காப்பாற்றுவதற்கான சுற்றுச்சூழல் செயற்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் 1972 ஆம் ஆண்டில், யூன் 5 ஆம் திகதி இச்சுற்றுச் சூழல் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த ஒரு தசாப்தத்திலேயே சுற்றுச்சூழலின் மகத்துவம் மக்களால் உணரப்படும் ஒன்றாக உள்ளது. அதாவது இயற்கைக்கு பாதகம் விளைவிக்கும் ஏற்பற்ற மனித நடவடிக்கைகளின் தாக்கமே சுற்றுச்சூழலின் மாசுபாட்டிற்கு பெருதும் காரணமாகும். இயற்கையின் கொடையே உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் வாய்ப்பாகும். இயற்கையின் மீதான மனித தாக்கம் இன்று உலகில் ஏற்படுத்தியுள்ள பிரதிகூலங்கள் ஏராளம்..ஏராளம்.
எமது முன்னோர்கள் இயற்கையோடு சார்ந்த வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளனர். அப்போதெல்லாம் மும்மாரி பொழிந்தது. பயிர்கள் செழித்து வளர்ந்தன. செயற்கை கிருமி நாசினிகள், செயற்கை உர வகைகள் எதுவும் அவர்களிடம் இருந்ததில்லை. அளவிட முடியாத பெரும் ஆற்றல்கொண்ட இயற்கையை நாம் மாசுபடுத்தி, அழித்து அதுவே எம் மீதான அழிவாக மாற்றமடைவதற்கு காரணமாகியுள்ளோம்.
மிதமிஞ்சிய இரசாயன பயன்பாடு, நாடுகளுக்கிடையிலான பெரும் யுத்தம், உள்நாட்டுப் போர் இவையெல்லாம் இயற்கையின் அழிவுக்கு காரணமானவைகளே. வேலைகளை இலகுவாக்கும் நோக்கில் மனிதனால் கண்டறியப்பட்ட அனைத்தும் இயற்கையின் மீதான கொடிய தாக்கத்தினை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது.
வருங்கால சந்ததியினரும் வளமுடன் வாழ்ந்திட உகந்ததாக சூழலியல் அமைந்திருத்தல் அவசியமான ஒன்றாகும். பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அந்நாட்டின் சிறப்பான சுற்றுச்சூழலுக்கும் அந்நாட்டின் இயற்கை வளமே பிரதானம். ‘இயற்கையைப் பாதுகாத்து சுற்றுச் சூழலைப்பேணுவோம்’