×

கொழும்பின் புறநகர் பகுதியான தலவத்துகொட பிரதேசத்தில் அண்மையில் மசாஜ் நிலையமொன்றில் இருந்து  பெண் சிகிச்சை அளிப்பாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து அவர்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அடையாளங்கள் வெளிப்படும் வகையில் ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கு பொலிஸாரே பொறுப்புக் கூற வேண்டும் என்று  தெரிவித்து சர்வதேச மனித உரிமைகள் சட்டச் சங்கம் மற்றும் இலங்கை ஸ்பா சங்கம் ஆகியன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளன.

பொலிஸாரின் இந்தச் செயலால் பாதிக்கப்பட்ட பெண்கள் உயிரை மாய்க்கும் தூண்டல் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தலவத்துகொட பிரதேசத்தில் அண்மையில் சில மசாஜ் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த பெண்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, பொலிஸார் பெண்களின் உரிமைகளை மீறி, அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டதாக சர்வதேச மனித உரிமைகள் சட்டச் சங்கத்தின் சட்டத்தரணி சுசந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் நியாயமான விசாரணை ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, மசாஜ் நிலையங்களில் பெண்களை தகாத நடத்தையுள்ளவர்கள் என பிரசித்திப்படுத்துவதன் மூலம் அவர்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க குறிப்பிட்டார்.

ஸ்பா செய்வதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் தேவையில்லை. அவர்கள் ஆயுர்வேத நிலையங்களிலேயே இருக்க வேண்டும். அது குறித்து பொலிஸாருக்கு விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115