×

ருஹுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த, மாத்தறை தெனியாய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தலி தாரிகா என்ற மாணவி டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.அவரது இந்த திடீர் மறைவு, ருஹுணு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அத்துடன், அவர்கள் தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, சந்தலி தாரிகா தனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது, தனது நடனக் குழுவினருக்கு தனது உடல்நிலை குறித்து அனுப்பிய குறுந்தகவலில் தனக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னால் நடன நிகழ்விற்கு வர முடியாதெனவும், குறிப்பிட்டுள்ளார்.நான் இறக்காவிட்டால் வருவேன் என குறிப்பிட்டிருந்த செய்தி பலரையும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. எனினும் குறுந்தகவல் அனுப்பிய 5 நாட்களில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 37,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.எனினும், தற்போது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 என்ற எல்லையையும் தாண்டியுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்குடன், இந்த நோய் பரவல் கட்டுப்பாடின்றி மிக வேகமாக அதிகரித்து வருகிறது.இந்த வைரஸ் நோய் பரவலில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன.நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு பல பகுதிகளை உத்தியோகபூர்வமாக அதி அபாய வலயங்களாக அறிவித்துள்ளது.அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இந்த அதி அபாய வலயங்களுக்குள் அடங்குகின்றன.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115