கிளிநொச்சி மாவட்ட பளை முல்லையடி கிராமத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் மகன் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் பளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வசித்து வரும் ஊடகவியலாளர் ஒருவரின் 12 வயது மகன் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்படுகின்ற நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி அன்று மாலை 3.00மணியளவில் பளை முல்லையடி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.
பளை பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக தான் செய்தியறிக்கையிட்டு வருவதாகவும் இது தொடர்பாக பல செய்திகள் ஆதாரத்துடன் வெளிப்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்ற நிலையில் பல அச்சுறுத்தல்கள் தமக்கு வந்ததாகவும் அவர் கூறினார். எனினும் அதை பொருட்படுத்தாமல் தனது கடமையை தான் தொடர்ந்து வந்த நிலையில் தனது மகன் ஆலய பொங்கல் விழாவிற்காக சென்ற போது இனந்தெரியாத சிலரால் காரணம் இன்றி தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் தனது மகனை கைகளாலும், கால்களாலும் அடித்து மோட்டார் சைக்கிளால் இடிப்பதற்கும் முற்பட்டுள்ளனார்.
இதன் போது அவர்கள் உன்னை அடித்து கொலை செய்து குளத்தில் போட்டுவிடுவோம், உனது அப்பா கமராவ தூக்கிட்டு வந்து செய்தி எடுப்பார் என்றும் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பளை பொலிசாரிடம் தாம் முறைப்பாடு அளித்த நிலையில் மேலதிக விசாரனைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் கூறினார்.