ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்கத் தெரியாது போல உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விமர்சனம் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கறுப்பு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட போதே சாணக்கியன் இவ்வாறு கூறினார்.
இதன்போது சாணக்கியன் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி அவருடைய விசேட உரையில் ஆவேசமாக பல கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். தனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து 95 ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக தெரிவித்திருக்கின்றார்.
நான் நினைக்கின்றேன் ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்க தெரியாது போல் விளங்குகின்றது. விவசாயிகளின் ஒரு கிலோ நெல்லுக்கு 95 ரூபாய் கூட கொடுத்தால் அவர்களுடைய முதலீடு கூட பெற முடியாது என்பது ஜனாதிபதிக்கு விளங்கவில்லை.
கணக்கு வழக்கு தெரியாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் இந்த நிலை தான் வரும் என்றும் அவர் குறிப்பிட்டார் .
அதுபோன்று அவருடைய கையாட்கள் என இந்த மாவட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கணக்கும் தெரியாமல் போயுள்ளதாகவும் சாண்க்கியன் மேலும் தெரிவித்தார்.