
மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயலிழந்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை தனியார் மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாளை முதல் மின்வெட்டை நீடிக்காமல் மின் உற்பத்தியை பராமரிக்க தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் இருப்புகளை மின்சார சபைக்கு, ,இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் மின்பிறப்பாக்கியை, மீள இயக்குவதற்கு 3 முதல் 5 நாட்கள் வரை செல்லும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நீராவி கசிவின் காரணமாக இந்த மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மின் நிலையங்களை பயன்படுத்தி நிலைமையை நிர்வகிப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தற்போது பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.