லண்டன் லூசியம் பகுதியில் வசித்து வரும் பிரபல தமிழ் வர்த்தகரின் காரொன்று அண்மையில் திருடிச் செல்லப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த காணொளி பதிவுகள் தற்பொழுது வெளியாகி புலம்பெயர் தமிழர்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த வர்த்தகர் தனது காரினை விற்பனை செய்வதற்காக இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்து நிலையில், அந்த விளம்பரத்தை பார்வையிட்ட மூவர் காரினை வாங்குவதாக கூறி குறித்த வர்த்தகரை நாடியுள்ளனர்.
குறித்த காரினை பார்வையிடுவதற்காக வர்த்தகரின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் காரினை பார்வையிட்டப் பின்னர் அதன் மேலதிக இணைப்புச் சாவியை எவரும் காணாத சமயம் லாவகமாக எடுத்துள்ளனர்.
அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த பிறிதொரு சாவியை வைத்தும் சென்று பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் அங்கு வருகை தந்த சந்தேகநபர்கள் மேலதிக இணைப்பு சாவியை வைத்து காரை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவமானது சிசிடிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் அது தொடர்பிலான காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் வாகன விற்பனைக்காக இணையத்தளங்களில் விளம்பரங்கள் செய்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் திருடப்படுகின்ற வாகனங்களுக்கு பதிலாக காப்புறுதி நிறுவனங்களால் புதிய வாகனங்கள் வழங்கப்படுகின்றதால் வாகனங்களுக்கான அடுத்த வருடத்திற்கான காப்புறுதி தொகை அதிகரிக்கிறது.
இதன் காரணமாக வாகனங்களை பறிகொடுப்பவர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இணையத்தளம் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை போட்ட பின்னர் அதனை பார்த்து கொள்வனவு செய்வதற்காக வருபவர்களில் ஒரு சிலர் வாகனத்தின் இரண்டாவது இணைப்பு சாவியையும் (Spare Key), காரினுடைய புத்தகத்தையும் மிகவும் லாவகமாக திருடிச் செல்கின்றனர்.
எனவே இவ்வாறு விளம்ப்ரம் செய்யும் வாகன உரிமையாளர்கள், தமது வாகனத்தின் இராண்டாவது இணைப்பு சாவி மற்றும் வாகன புத்தகம் என்பன தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் புலம்பெயர்ந்து பிற தேசங்களில் வாழும் மக்கள் அதீத கஸ்டங்களுக்கு மத்தியில் உழைத்து தங்களுக்கான பொருட்களை ஈட்டும்போது அவை தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என புலம்பெயர்வாழ் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.