
இலங்கை சந்தையில் இதுவரை காலமும் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த மண் எண்ணெய் அடுப்புகளில் விலை பல மடங்காக அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிலையங்களில் உரிமையாளர்கள் ஒரு மண் எண்ணெய் அடுப்பை 6 ஆயிரம் 7 ஆயிரம் ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை உட்பட நாட்டின் பல நகரங்களில் மண் எண்ணெய் அடுப்புகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
நாட்டில் ஆங்காங்கே சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்த சம்பவங்களை அடுத்து, மக்கள் எரிவாயு அடுப்புக்கு மாற்றாக மண் எண்ணெய் அடுப்புகளை பயன்படுத்தி சமைக்க ஆரம்பித்துள்ளனர்.
சில வர்த்தகர்கள் தாம் எண்ணிய விலையில் மண் எண்ணெய் அடுப்புகளை விற்பனை செய்வது மிகவும் அநீதியானது மக்கள் கூறியுள்ளனர். தம்மை மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, அதிக விலையில் மண் எண்ணெய் அடுப்புகளை விற்பனை செய்யும் வர்த்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.