நாட்டை மூடுவதில்லை என்ற தீர்க்கமான முடிவினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள அதேவேளை கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு அமைச்சரவை சந்திப்பு நடந்தது. இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தனது தீர்மானத்தை அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை இலங்கையில் கொவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நாட்டை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்காவிட்டால் பலவந்தமாக நாட்டை மூடச் செய்வோம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தொழிற்சங்க கூட்டணியின் பிரதிநிதியான வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுக்காவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை நாங்களாவே மூடிக்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே வசந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சுகாதார துறையினர் நாட்டை முழுமையாக முடக்குமாறு கோரிக்கைகளை விடுத்து வருகின்ற போதும் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையெடுக்காது மக்களின் உயிர்களுடன் விளையாடி வருகின்றதாகவும் குற்றம் சுமத்திய சமரசிங்க , எனவே மக்களின் உயிரை காப்பதற்காக நாங்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும் என்றும் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.