
இசைச் சிகிச்சை என்பது, ஒருவருடைய உளவியல் தேவைகளைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தப்படும் தலையீடாகும். தகுதிபெற்ற இசைச் சிகிச்சையாளர் ஒருவர், பாதிக்கப்பட்டவருடைய உளவியல் மற்றும் சமூகத் தேவைகளை மதிப்பிடுவார், அவருக்கு உரிய சிகிச்சையைத் தருவார். இதில் பாடுதல், ஓர் இசைக்கருவியை இசைத்தல், இசையைக் கேட்டல், இசையை உருவாக்குதல் போன்றவை இடம்பெறலாம். இசைச்சிகிச்சையானது, பாதிக்கப்பட்டவர் தனது சிகிச்சையைத் தொடர ஊக்கம்தருகிறது, அவர்களது இயக்கவியல் திறன்களை (உடற்குறைபாடு கொண்ட குழந்தைகளில்) மேம்படுத்துகிறது, தகவல்தொடர்பு வெளிப்பாடாகவும் திகழ்கிறது. குறிப்பாக, தங்கள் எண்ணங்கள், உணர்வுகளைச் சொல்லால் சொல்லச் சிரமப்படுகிறவர்களுக்கு இது நல்ல பலன் தருகிறது. உதாரணமாக, ஒருவர் உடல் அல்லது மன அதிர்ச்சியை அனுபவித்திருக்கும்போது, அவர் அதிர்ச்சி நிலையில் இருக்கலாம், பேச இயலாமல் திகைக்கலாம், அவர்களுக்குள் உள்ள ஆழமான உணர்வுகளை அவர்களால் சொல்ல இயலாமல் போகலாம். இசைச் சிகிச்சை இந்தத் தடையை உடைக்கிறது. அவர்கள் தங்களுடைய உள் முரண்களையும் வெளிப்படுத்தாத உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவுகிறது.
மனத்தைத் தளர்த்தும் மற்ற உத்திகளைப்போலவே, இதமான இசையை இசைப்பது அல்லது கேட்பது (குரல்களை அல்லது இசைக்கருவிகளை) மூளையைத் தூண்டுகிறது, அறிவாற்றல், உணர்வுநிலை மற்றும் உடல்சார்ந்த செயல்பாடுகளில் ஒரு நேர்விதமான தாக்கத்தை உண்டாக்குகிறது.